தவறான சிகிச்சையால் இளம் வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் தலைமறைவு!!

279

சென்னையில்..

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை மரணமடைந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா(வயது 17). ராணிமேரி கல்லூரியில் படித்து வருகிறார், கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் மூட்டுவலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியுள்ளதாக கூறி அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.

அப்போது, மிக இறுக்கமாக சுருக்கு கட்டு போடப்பட்டதால், ரத்த ஓட்டம் தடைபட்டு, ரத்தநாளங்கள் பழுதானது. இதனையடுத்து பிரியா மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், மேலும் தொற்று பரவாமல் இருக்க பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிறுநீரகம், ஈரல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்படைய சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.

பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, கவனக்குறைவாக செயல்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் கே.சோமசுந்தர், எலும்பியல் மருத்துவர் ஏ.பால் ராம் சங்கர் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவு நகலை வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்ற போது, இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. இவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.