கணவருக்கு கண்ணை கட்டி விட்டு பீச்சில் கண்ணாமூச்சி… அடுத்து மனைவி செய்த கொடூர செயல்!!

401


தூத்துக்குடியில்..



தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் வினோதினி. இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கதிரவன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது.



இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு பிறகு சென்னையில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புது ஜோடிகளான வினோதினி மற்றும் கதிரவன் ஆகியோர் திருவான்மியூர் பீச்சுக்கு சென்றுள்ளனர்.




அங்கே கணவரின் கண்களை துணி கொண்டு கட்டி கண்ணாமூச்சி விளையாடி உள்ளார் வினோதினி. இதனிடையே, தனது தாலியை பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்கள், தனது கணவரை வெட்டி தப்பித்து சென்றதாகவும் வினோதினி அலறி உள்ளார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கதிரவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


ஆனால், அங்கே சிகிச்சை பலனின்றி கதிரவன் உயிரிழந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருவான்மியூர் பீச் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது இந்த சம்பவத்தை அப்படியே தலைகீழாக திருப்பி போடும் அதிர்ச்சி தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதன் படி, ஒரு நபரிடம் வினோதினி தனது தாலியை கழற்றி கொடுப்பது தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இதனைத் தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை என்ன என்பதும் தெரிய வந்தது. அதன்படி, கதிரவனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, விளாத்திகுளம் பகுதியை அடுத்த குருவார்பட்டி என்னும் இடத்தை சேர்ந்த அந்தோணி ஜெகன் என்பவரை வினோதினி காதலித்து வந்துள்ளார்.

இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், வினோதினி மற்றும் அந்தோணி ஆகியோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது.

இதன் பின்னர் தான் கதிரவனை திருமணம் செய்துள்ளார் வினோதினி. ஆனாலும், அந்தோணி ஜெகனுடன் தொடர்பில் வினோதினி இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி தான் திருவான்மியூர் பீச்சுக்கு கணவருடன் வினோதினி சென்ற சமயத்தில் அங்கே அந்தோணி ஜெகனையும் அவர் வர வைத்துள்ளார்.

இதன் பின்னர், கண்ணாமூச்சி ஆடுவது போல நாடகமாடிய சமயத்தில் கதிரவனை அந்தோணி ஜெகன் கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வினோதினி மற்றும் அந்தோணி ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வினோதினி மற்றும் அந்தோணி ஜெகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.