கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிக்கு நடந்த சோகம்!!

307

கடலூரில்..

கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி பகுதியில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் ரத்தப்போக்கு அதிகரித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீழக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். கூலித் தொழில் செய்து வரும் இவருக்கும் அமுதா (28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தை உள்ள நிலையில், அமுதா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.

அதில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது. மூன்றாவது பெண் குழந்தை என்பதால் கருவை கலைக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து அமுதாவுக்கு கடந்த 17-ம் தேதி அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து அமுதா தன்னுடைய சொந்த ஊரான கீழகுறிச்சிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அமுதா சுயநினைவு இன்றி இருந்துள்ளார்.

இதனை அடுத்து குடும்பத்தினர் அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று இருக்கிறார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர், அமுதா வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறி உள்ளார்.

இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.