வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் கைபேசியில் பேசிய பெண் திடீரென எடுத்த விபரீத முடிவு!!

2111

விருதுநகரில்..

வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தகராறால் மனமுடைந்த பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 25). இவருக்கும், குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதி இருவரும் குண்டலகுத்தூர் கிராமத்தில் கூட்டுக் குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்துவந்தனர்.

கட்டடத் தொழிலாளியான வழிவிட்ட அய்யனார், தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் பானுமதி தனது கணவர் அய்யனாருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மனமுடைந்த பானுமதி வீட்டிலுள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீஸார், பானுமதியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், மருத்துவமனைக்கு வந்த பானுமதியின் பெற்றோர் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சாத்தூர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பானுமதியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், `மகளின் இறப்பில் சந்தேகம் இருந்தால் அது குறித்து புகார் அளியுங்கள்.

மேலும் கூறாய்வு அறிக்கையின் முடிவின்படி தவறு செய்தவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பானுமதியின் உடலை வாங்கிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பானுமதியின் பெற்றோர் அப்பநாயக்கன்பட்டி போலீஸில், மருமகன் அய்யனார், அவரின் தம்பி தமிழ்ச்செல்வன், அவர்களின் பெற்றோர் சூரியவேல், முருகேஸ்வரி ஆகியோர்மீது புகார் அளித்தனர். அதன்பேரில் பானுமதியின் இறப்பு குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.