விபத்தில் சிக்கியது தன் மகள் என்று தெரியாமலே தாய் செய்த செயல் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

266

ஆல்பர்ட்டாவில்..

கார் விபத்தொன்றில் சிக்கிச் சிதைந்த இளம்பெண் ஒருவருக்கு சிகிச்சையளித்த கனேடிய பெண்ணுக்கு, பின்னர் தெரியவந்த பயங்கர உண்மையால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர்.

ஆல்பர்ட்டாவில் இம்மாதம் (நவம்பர்) 15ஆம் திகதி, அதாவது கடந்த வாரம், கார் விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு உதவ, மருத்துவ உதவிக்குழுவினரான Jayme Ericksonக்கு அழைப்பு வந்துள்ளது.

முதல் ஆளாக ஓடோடிச் சென்ற Jaymeம், நண்பரும் சக மருத்துவ உதவிக்குழுவினருமான Richard Reedம் இணைந்து, விபத்தில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துபோன இளம்பெண் ஒருவருக்கு 20 நிமிடங்களுக்கும் அதிகமாக சிகிச்சையளித்துள்ளார்கள்.

பின்னர் அந்த இளம்பெண் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சையளித்துவிட்டு Jayme வீடு திரும்ப, சிறிது நேரத்தில் பொலிசார் அவரைத் தேடிவந்துள்ளார்கள். அவர்கள் கூறிய செய்தியைக் கேட்ட Jayme, அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

ஆம், அவர் சற்று முன் சிகிச்சையளித்துவிட்டு வந்த இளம்பெண் வேறு யாரும் இல்லை, Jaymeஉடைய மகளான Montana Dobry (17) தான். பெற்ற தாய்க்கே அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்துபோயிருக்கிறது Montanaவுக்கு! பின்னர், காயங்கள் காரணமாக Montana உயிரிழந்துவிட்டார்.

தாயும் தந்தையும் கத்திக் கதறித் துடித்து அடங்கியபின், தங்கள் மகளுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதென முடிவு செய்துள்ளார்கள் Jaymeஉடைய குடும்பத்தினர்.

வாழ்வு துவங்கும் நேரத்தில் வாழ்விழந்தாலும், இறந்தும் தன் மகள் யார் உடலிலோ வாழ்கிறாளென்ற திருப்தி மட்டுமே மீதமிருக்கிறது Montanaவின் தாய்க்கு. இதற்கிடையில் Montanaவின் மரணம், Jaymeயுடன் பணியாற்றும் மருத்துவ உதவிக் குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.