சமாதானம் பேச வந்த கணவனை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி!!

1323

சேலத்தில்..

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் மோரூர் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் பகுதியை சேர்ந்தவர் தனபால்(44). தனியார் நூற்பாலை சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில், அதே பகுதியை சேர்ந்த சரிதா(38) என்பவரை காதலித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ(20) என்ற மகளும், நித்திஷ்குமார் (18) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சரிதா தனது குழந்தைகளுடன் அவருடைய தாயார் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனபால் தனது மனைவி சரிதாவை சமாதானம் பேசி, குடும்பம் நடத்த அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி சரிதா, மைத்துனர் சரவணன்(44), மாமனார் குமாரசாமி(68), மாமியார் ராஜம்மாள்(68) ஆகிய நான்கு பேரும் தனபாலை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மயங்கி கீழே விழுந்த தனபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தனபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலின் பெற்றோர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் தனபாலின் மனைவி சரிதா உட்பட நான்கு பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தியதில் தன் கணவனை கீழே தள்ளி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததை தனபாலின் மனைவி சரிதா மற்றும் மைத்துனர் சரவணன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த சங்ககிரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைக்க சென்ற காதல் கணவனை, அண்ணனுடன் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.