லுஸைலில்..
லுஸைல் நகரில் நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. கத்தாரின் லுஸைல் மைதானத்தில் நடந்த போட்டியில் 5 முறையை சாம்பியனான பிரேசில் அணியும், செர்பியா அணியும் மோதின.
முதல் பாதியில் செர்பியா அணி சிறப்பாக தடுப்பாட்டம் செய்ததால் பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என முடிந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் பிரேசில் ஆட்டத்தில் அனல் பறந்தது.
ரசிகர்களின் கவனம் நெய்மார் மீது இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ரிச்சர்லிசன் 62வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.
அதன் பின்னர் 73வது நிமிடத்தில் தன்னிடம் வந்த பந்தை மேலே எழுப்பி, அந்தரத்தில் பறந்து அசத்தலாக இரண்டாவது கோலையும் ரிச்சர்லிசன் அடித்தார்.
இந்த கோலைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். செர்பியா அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரிச்சர்லிசன் அடித்த இரண்டாவது கோல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.