விழுப்புரத்தில்..

காதலித்து கரம் பிடித்த மனைவியின் மீது, பின்னாலிருந்து மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து கொளுத்திய கணவனை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் நீதிபதியிடம் மரண வாக்குமூலத்திலும் காட்டிக் கொடுக்காமல், தானே கொளுத்திக் கொண்டதாக கூறியிருக்கிறார் சங்கீதா.

அதன் பின்னர், உறவினர்கள் அழுது, கெஞ்சி கேட்டுக் கொண்ட பின்னர், வீடியோவில் தனது சாவுக்கான காரணத்தைக் கூறியுள்ளதால் கணவர் சிக்கினார். விழுப்புரம், வழுதாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (30). ஓட்டுநரான இவர் சங்கீதா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முத்துக்குமரனுக்கு ஆரம்பத்தில் இருந்தே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால், சங்கீதா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆனால், தன் மீதான தவறை மறைக்க, முத்துக்குமார், வரதட்சணை சங்கீதாவிடம் வரதட்சணை அதிகம் வாங்கி வரும்படி தொந்தரவு செய்து உள்ளார்.

இதற்கு அவரது அக்கா கலையரசியும் உடந்தையாக இருந்து உள்ளார். வரதட்சணைப் பணம் வாங்கி வருவதற்கு சங்கீதா மறுத்துள்ளார். கடந்த 5ம் தேதியும் இது குறித்து இருவருக்குமிடையே சண்டை நடந்துள்ளது.

அப்போது சங்கீதாவுக்கு பின்பக்கமாக வந்து, முத்துக்குமாரும், அவரது அக்காவும் திடீரென சங்கீதா மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டவும், சங்கீதா அது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

சங்கீதாவின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சைப் பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.

முன்னதாக, நீதிபதி மருத்துவமனைக்கே வந்து சங்கீதாவிடம் வாக்குமூலம் கேட்ட போதும், தானே பற்ற வைத்துக் கொண்டதாக பொய் சொன்னார். ஆனால், சங்கீதா சொல்வது பொய் என்றும், கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை நிகழும் என்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரியும் என்பதால், சங்கீதாவின் காலில் விழுந்து அழுதப்படியே கெஞ்சியுள்ளனர். உண்மையை நீதிபதியிடம் சொல்லுமாறு மன்றாடி உள்ளனர்.

அதற்கு பிறகு தான் சங்கீதா உண்மையை சொல்லி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வீடியோ வாக்குமூலம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல் வாக்குமூலத்தில், நீதிபதி சங்கீதாவிடம் பெயர் கேட்கிறார், வயது கேட்கிறார், கணவர் பெயர், அவரது வேலை என்ன என்று கேட்கிறார். எத்தனை பிள்ளைகள், அவர்களுக்கு வயது என்ன என்று கேட்கிறார், பிறகு எப்படி இந்த தீவிபத்து நடந்தது? கணவர் தான் காரணமா? என்று கேட்கிறார்.

இது அனைத்திற்கும் சங்கீதா சொன்ன பொய்யான வாக்குமூலத்தில், “என் பேர் சங்கீதா. 24 வயசாகிறது.. எனக்கு 3 பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்கு வயசு5, இன்னொருத்தனுக்கு 4 வயசு, இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயசாகுது. என் கணவர் பெயர் முத்துக்குமார். கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகுது.

2017ல் கல்யாணம் நடந்தது. அன்னைக்கு சிலிண்டர் வீட்டில் காலி ஆயிடுச்சு சார். அதனால் ஸ்டவ் பற்ற வைக்க மண்ணெண்ணெய் எடுத்தேன். ஸ்டவ் எனக்கு அவ்வளவாக பத்த வைக்க தெரியாது. இருந்தாலும் மண்ணெண்ணைய் எடுத்து, ஸ்டவ்வில் ஊற்றி விட்டு, மீதி கொஞ்சம் தனியா எடுத்து வெச்சேன்.

அது கீழே கொட்டி விட்டது. அது என் சேலையில் பட்டு விட்டது ஆனால், அதை நான் கவனிக்கவில்லை.. ஸ்டவ் பற்ற வைத்ததுமே என் துணியில் நெருப்பு பற்றிக் கொண்டது. என் வீட்டுக்காரர் அப்போது தூங்கிட்டு இருந்தார். நான் கத்தி அலறியதும் அவர் ஓடி வந்து என்னை காப்பாற்றினார். என் வீட்டுக்காரருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆரம்பத்தில் எங்களுக்குள் சண்டை இருந்தது.. ஆனால், அதுக்கப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டார். டிரைவராக இருக்கிறார். இப்போ ஒழுங்கா இருக்கார். அவர் மீது எந்த தப்பும் இல்லை. நான் தான் மண்ணெண்ணெயை தெரியாமல் ஊற்றிக் கொண்டேன்” என்கிறார்.

பிள்ளைகளுக்கு எதுவும் ஆகாது. தயவு செய்து உண்மையைச் சொல்லுமா என்று உறவினர்கள் சங்கீதாவின் காலில் விழுந்து அழுதபடியே கேட்டதும், சங்கீதா அழுதபடியே இரண்டாவதாக தந்த மற்றொரு மரண வாக்குமூலத்தில், “நான் சங்கீதா பேசறேன்.

என் வீட்டுக்காரர் வரதட்சணை கேட்டு என் அப்பாவை டார்ச்சர் செய்துட்டு வந்தார். என்னையும் இழுத்து போட்டு அடிப்பார். தீபாவளி முடிந்ததில் இருந்தே நிறைய குடிச்சிட்டு வந்தார். அதனால், மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தி கொள்ள போவதாக அவரிடம் சொன்னேன்.

உடனே மண்ணெண்ணையை நிஜமாகவே எடுத்து வந்து, பின்பக்கமாக வந்து என் மீது ஊற்றி என்னை கொளுத்திட்டார். அதுக்கப்புறமா என்னை தண்ணியில் தூக்கி கடாசி விட்டார். தோல் எல்லாம் எனக்கு கழண்டு வந்தது. உடம்பெல்லாம் பற்றிக் கொண்டது. நான் கத்தினேன். எல்லாரும் ஓடி வந்து தூக்கினாங்க. ஆம்புலன்ஸ் வந்தது.

என்னை அதில் ஏற்றினாங்க. உடனே இவர் என் கூட ஆம்புலன்ஸில் வரமுடியாதுன்னு சொன்னார். எல்லாரும் திட்டின பிறகு, என்கூட வந்தார். வர்ற வழியெல்லாம் என்னை திட்டிகிட்டே வந்தார். நீ மட்டும் உண்மையை சொன்னால், உன்னை கொளுத்தின மாதிரி, பசங்களையும் கொளுத்திடுவேன்னு சொன்னார்.

அதனால் தான், நான் பயந்துட்டு, பசங்களுக்காக, யார்கிட்டயும் உண்மையை சொல்லல. ஜட்ஜ் கிட்ட, டாக்டர் கிட்ட, போலீஸ் கிட்ட, என் வீட்டுல, எல்லார்கிட்டயும் பொய் தான் சொன்னேன். இப்ப உண்மையை சொல்றேன். என்னை என் வீட்டில் எல்லாரும் உண்மை சொல்ல சொன்னாங்க. இது தான் நடந்த உண்மை. தயவு செஞ்சு என் பிள்ளைகளையாவது காப்பாற்றுங்க” என்று கூறுகிறார்.





