பொலிவூட் திரைப்படமான மெட்ராஷ் கபே தமிழகத்தில் திரையிடப்படுவதை தடைசெய்யவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. சட்டத்தரணியான சி எழிலரசு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி திரையிடப்படவுள்ள நிலையில், இது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையை மையப்படுத்திய அரசியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று மனுதாரர் குறிப்பி;ட்டிருந்தார்.
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நிதியளிக்கப்பட்ட இந்த திரைப்படம், இலங்கையில் தமிழர்களின் கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
எனவே இந்த திரைப்படம் தணிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டும். இல்லையேல் தமிழர்களிடையே பதற்றத்தை தோற்றுவிக்கும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் மனுதாரர் தமது மனுவுக்காக எந்த ஒரு ஆவண ரீதியான சாட்சியத்தை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.