தன்னைப் போல் தோற்றமுடைய பெண்ணை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய இளம்பெண் காதலனுடன் கைது!!

371

உத்தரபிரதேசத்தில்..

தன்னைப் போன்ற முக அமைப்பைக் கொண்ட பெண்ணை கொலை செய்துவிட்டு, தான் உயிரிழந்தது போல நாடகமாடிய இளம் பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், நொய்டா பெருநகரத்தில் வசித்து வருபவர் பாயல் பாட்டி (22). பாயலின் பெற்றோர் தங்கள் உறவினரான சுனில் என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

கடனை திருப்பி தரும்படி பாய்லின் குடும்பத்தினரை சுனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி பாயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பாயலின் குடும்பத்தினரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் கடன் தொல்லை காரணமாக பாயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கவும் பாயல் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து பாயல் தனது காதலனான அஜய் தாக்கூரை கூட்டு சேர்த்து உள்ளார். அஜய் தாகூருடன் நொய்டாவில் உள்ள மாலுக்கு சென்றபோது, அங்கு தன்னை போன்ற உடல் அமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்துவரும் ஹேமா சவுதிரி எனும் 28 வயது பெண்ணை பார்த்துள்ளார்.

அப்போது ஹேமாவை கொன்று தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைக்க பயல் திட்டமிட்டுள்ளார். காதலன் அஜய் தாக்கூரை ஹேமாவிடம் பழகுமாறு கூறியுள்ளார். இதை கேட்டு அஜய் தாக்கூரும் அவருடன் நட்பாக பழகினார்.

நவம்பர் 12-ஆம் தேதி ஹேமாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு அஜய் தனது காதலி பயலின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த பயல் மற்றும் அவரது காதலன் அஜய், ஹேமாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி ஹேமாவின் முகத்தை சிதைத்துள்ளனர். பின்பு, உயிரிழந்த ஹேமாவின் உடலில் பாயலின் உடையை அணிவித்துள்ளனர்.

கொதிக்கும் எண்ணெய் முகத்தில் பட்டதால், தனது அழகு போய்விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக பாயல் தன் கைப்பட கடிதம் எழுதி ஹேமா அருகே போட்டு விட்டு காதலனுடன் தலைமறைவானார்.

ஆனால் ஹேமாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பொலிஸார் விசாரணை நடத்தியதில், ஹேமா கடைசியாக அஜய் தக்கூருடன் பைக்கில் சென்னறது தெரியவந்தது.

இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாயல் மற்றும் காதலன் அஜய் ஹேமாவை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.