காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவன் விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

300

சேலத்தில்..

சேலத்தில் காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சீமாஷ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

இவர் கடந்த 1 வாரமாகவே காதல் விவகாரத்தில் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாணவர் திடீரென தனது விடுதி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார்.

இதனால் பதறிப்போன சக மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக சீமாஷ்ரூபனை மீட்ட மாணவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே சீமாஷ்ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஒருதலை காதலில் மாணவன் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மனவேதனையில் பேசி வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்காலிக பிரச்சினையை தாண்டி செல்லாமல் திடீரென தற்கொலை செய்துகொள்பவர்களால் அவர்களது குடும்பம் தீரா துயரத்தில் மடிந்து விடுகிறது.

அண்மையில், சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரையில் ஆசிரியர் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். விருதுநகரில் மர்மமான முறையில் நேற்று கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.