கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு.. பரிதவிக்கும் பெண் குழந்தைகள்!!

450

விருதுநகரில்..

விருதுநகரில் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிதம்பரம் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேய ராஜ் (41). இவர் தனது மனைவி அருணாமகாஸ்ரீ (37) என்பவருடன் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிகளுக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேய ராஜ் அதே பகுதியில் பெயிண்ட் வியாபாரக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் ஆன்லைன் டிரேடிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று கார்த்திகேயராஜ் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் அருகில் உள்ளவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உறவினர்கள் வந்து வீட்டின் கதவை தட்டியும், கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மேற்கு காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து கணவன், மனைவி இருவர்களின் உடல்களை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முதற்கட்டமாக மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகேய ராஜ் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கடன் பிரச்சினை தொழில் நஷ்டத்தால் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்காலிக பிரச்சினையை தாண்டி செல்லாமல் திடீரென தற்கொலை செய்துகொள்பவர்களால் அவர்களது குடும்பம் தீரா துயரத்தில் மடிந்து விடுகிறது.

அண்மையில், சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரையில் ஆசிரியர் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். தற்கொலை குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.