பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

746

நெல்லையில்..

நெல்லை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் தவறான சிகிச்சையால் உயிரிந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை டவுன் சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி மகாராணி (25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அலெக்சின் மனைவி மகாராணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டாவது பிரசவத்திற்காக நெல்லை டவுணில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று இரவு மகாராணிக்கு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த மகாராணி எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவறான சிகிச்சை காரணமாகவே மகாராணி உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டினர். எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகாராணியின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி நெல்லை டவுன் கீழ ரத வீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மகாராணி இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.