பாடசாலை மாணவன் எடுத்த விபரீத முடிவு : ஆசிரியர் கைது!!

1184

தமிழகத்தில்..

தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனிடையே மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்.

மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் இவருக்கு கவின்குமார், தர்ஷன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கவின்குமார் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கவினை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே சிறுவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக, வழக்கு பதிவுசெய்த நீலாங்கரை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த வாரம் தர்ஷன் வகுப்பறையில் தூங்கியதாகவும் இதனை ஆசிரியர் ஒருவர் கண்டித்திருக்கிறார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும், மாணவனின் தந்தை மகேஷ் பள்ளி நிர்வாகத்திடம் அந்த ஆசிரியர் குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பள்ளி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் இருவரும் கவினிடம் பள்ளி கழிவறையில் ஹான்ஸ், கூல் லிப் வைத்திருந்தது நீதானே என்று கேட்டு அடித்துள்ளனர் . மேலும், சிறுவனிடம் புகையிலை பொருளை பயன்படுத்தியதாக கடிதம் எழுதித்தரச் சொல்லி வற்புறுத்தியது தெரியவந்தது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நீலாங்கரை பகுதி போலீஸார், முதற்கட்டமாக உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 50-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவர் படித்த பள்ளியின் முதல்வர், 2 ஆசிரியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.