பார்வையற்றவரின் மகள் பிளஸ் 2 தேர்வில் 1,168 மதிப்பெண்கள் பெற்று, மாநகராட்சி பாடசாலைகளில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மகளிர் மேல்நிலைப் பாடசாலையில் படித்த மாணவி எம்.சவ்ஜன்யா பிளஸ்-2 தேர்வில் தமிழ்- 189, ஆங்கிலம்-183, பொருளாதார வியல்-199, வணிகவியல்-200, கணக்குப் பதிவியல்-197, வணிகக் கணிதம்-200 என மொத்தம் 1200-க்கு 1168 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சவ்ஜன்யாவின் தந்தை மால கொண்டையா, பிறவியிலேயே பார்வையற்றவர். தாய் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மிகவும் வறுமையான சூழலில் பார்வையற்ற தந்தை மற்றும் சகோதரி, சகோதரனோடு வாழ்ந்து வரும் சவ்ஜன்யா, படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி, அதிக மதிப் பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதுபற்றி சவ்ஜன்யா கூறும்போது,
மாநகராட்சி பாடசாலையில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு காரணம், மாநகராட்சி நிர்வாகமும் ஆசிரியர்களும் பாடசாலையில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளும்தான். சி.ஏ. படித்து நல்ல பணிக்குச் சென்று என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வேன் என்றார்.