திருமணத்தில் மாலை மாற்றும் சமயத்தில் உயிரிழந்த மணப்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

343

லக்னோவில்..

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது மாலை மாற்றும் சமயத்தில் சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (02-12-2022) லக்னோ அருகே உள்ள மலிஹாபாத்தில் உள்ள பாத்வனா கிராமத்தில் நடந்திருக்கிறது. ராஜ்பால் என்பவரின் மகள் ஷிவாங்கி ஷர்மா என்ற 21 வயதுடைய அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்திருக்கிறது.

இதற்கான பார்ட்டி நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருமணத்துக்கான வரமாலை சடங்குக்காக மணமேடைக்கு ஷிவாங்கி சென்றிருக்கிறார். சடங்கு முடிந்த பிறகு மணமக்கள் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது திடீரென மணப்பெண் ஷிவாங்கி மயங்கி விழவே திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். இதனையடுத்து ஷிவாங்கியை உடனடியாக அருகே இருந்த சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்திருக்கிறார்.

மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது அவர் திடீர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்திருக்கிறார்கள். இறந்த ஷிவாங்கி கடந்த 15-20 நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். காய்ச்சல் இருந்ததோடு அவருடைய ரத்த அழுத்தமும் குறைவாக இருந்திருக்கிறது.

இருப்பினும் ஒரு வாரத்தில் குணமடைந்திருக்கிறார். இந்த நிலையில், திருமணம் நெருங்கும் வேளையில் மீண்டும் ஷிவாங்கியின் ரத்தஅழுத்தம் குறைந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில்தான் திருமணத்தின் போது அந்த பெண் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்காமல் நேற்று (03-12-2022) ஷிவாங்கியின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் முடித்திருக்கிறார்.

ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் மலிஹாபாத் காவல்துறையினருக்கு இந்த விவகாரம் தெரியவரவே சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் நடந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

தீவிரமான உடற்பயிற்சி செய்பவர் முதல் பலரும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வரும் வேளையில், உடல்நலனில் ஏதேனும் சிறிய மாற்றங்கள் இருந்தாலும் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சையை பெற்றுக்கொள்வதே வருமுன் காத்தலுக்கு சான்றாக இருக்கும்.