வவுனியாவில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

1281

கவனயீர்ப்பு போராட்டம்..

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பட்டாணிச்சிப் புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் பட்டாணிச்சிப் புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவு அலுவலகம் முன்பாக இன்று (06.12.2022) காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தின் போது சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டும், அவர் பக்கச்சார்ப்பாக செயற்படுகின்றார்,

கடமை நேரத்தில் அலுவலகத்திற்கு சமூகமளிப்பதில்லை, சமூர்த்தி முத்திரைகளை சரியான காரணமின்றி வெட்டுகின்றார் போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதி சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

தாம் கடமைகளை சரிவர மேற்கொள்வதாகவும் சிலர் தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தம் மீது தேவையற்ற குற்றச்சாட்டினை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.