திருநெல்வேலியில்..
திருநெல்வேலி அருகே அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கதறி அழுத தம்பியும் அதிர்ச்சியில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் தினேஷ்குமார். 30 வயதான இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அண்மையில் நடைபெற்ற காவலர் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிகிறது. தினேஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தினேஷ் குமாருக்கும் அவர் காதலித்துவந்ததாக சொல்லப்படும் இளம்பெண்ணிற்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், தேர்வு சரியாக எழுதாததால் கவலையில் தினேஷ் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தினேஷ் குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் காவல்நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
தினேஷ் குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்டதை அறிந்து ஓடிவந்த உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அப்போது அங்கு வந்த தினேஷ் குமாரின் சித்தப்பா மகன் வெங்கடேஷ் கதறி அழுதிருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் வெங்கடேஷ் மயக்கமடைந்து கீழே விழ, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து வெங்கடேஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், நெஞ்சுவலி காரணமாக வெங்கடேஷ் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அண்ணனின் மறைவு செய்தியை கேட்டு, கதறி அழுத தம்பியும் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.