
சுவிஸ்லாந்து நாட்டின் டிசினோ பகுதியில் உள்ள லோசொனே நகரில் பட்ரிசியட்டா என்ற பிரெஞ்சு உணவகம் இயங்கி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஜியோவன்னி டபுரோ என்பவர் இந்த உணவகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் உணவை முழுவதும் சாப்பிடாமல் வீணாக்கி செல்வதைக் கண்ட அவர் இதற்கான ஒரு புதிய உத்தியைத் தற்போது கண்டறிந்துள்ளார்.
அதன்படி வாங்கும் உணவை தட்டில் மீதம் வைப்பவர்கள் தங்கள் பில் தொகையில் அபராதமாக கூடுதல் ஐந்து பிரான்க்குகளைக் கட்டவேண்டும் என்ற புதிய நடைமுறையை தபுரோ ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முதல் அவர் இந்த புதிய விதிமுறையை அந்த உணவகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளார். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இது குறித்த அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.
உணவை வீணாக்கி வெளியில் கொட்டுவதைப் பார்க்க தனக்கு கஷ்டமாக இருந்தது என்று கூறும் டபுரோ தான் இது குறித்து மக்களுக்கு வலுவான ஒரு தகவலைத் தெரிவிக்கவேண்டும் என்று விரும்பியதாகக் கூறினார்.
ஐந்து பிரான்க்குகள் என்பது இதற்கான ஒரு அடையாளம் மட்டுமே என்று குறிப்பிட்ட அவர் உணவு வீணாக்கப்படுவது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே தனது முதல் குறிக்கோள் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.




