பிரான்ஸ் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த சாட்சியாளர் டுபாய் நீதிமன்றத்தில் அழுது புலம்பியுள்ளார்.
33 வயதான இந்த சாட்சியாளருக்கு சிங்களம் மட்டுமே பேச தெரியும். இதனால் எதற்காக அழுகின்றாய் என நீதிபதி மஹர் சல்மா அல் மாஹதி கேட்டுள்ளார். பல தடவைகள் சாட்சியாளர் அழுது புலம்பியதுடன் அவர் கூறியது மொழிப் பெயர்ப்பாளருக்கு புரியவில்லை.
இதனையடுத்து சாட்சியாளர் மீது பரிவு கொண்ட நீதிபதி குர் ஆன் வசனம் ஒன்றை கூறி அவரை தேற்றியுள்ளார். தனது தந்தை இறந்து விட்டதாகவும் பிள்ளை காலில் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சாட்சியாளர் கூறியதுடன் மீண்டும் அழுது புலம்பினார்.
சாட்சியாளரின் கடவுச்சீட்டு பொலிஸார் பொறுப்பில் இருப்பதை பின்னரே நீதிபதி அறிந்து கொண்டதுடன், இதன் காரணமாவே அவர் அழுதார் என்பதையும் புரிந்து கொண்டார்.
சாட்சியாளர் மீது பரிதாபம் கொண்ட நீதிபதி கடவுச்சீட்டை பொலிஸ் பொறுப்பில் வைத்திருக்க வேறு காரணங்கள் இல்லை எனில் அதனை சாட்சியாளரிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சாட்சியாளர் டுபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் துப்பரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். பிரான்ஸ் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவர் பணியாற்றும் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு அரேபியர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.




