ஜெர்மனியில் தனது தந்தைக்குத் தெரியாமல் 2 வயது சிறுவன் ஒருவன் ஸ்டார்ட் செய்த கார் ஒரு கம்பத்தில் மோதி நின்றது.
தலைநகர் பெர்லினைச் சேர்ந்த மிரான்கன் என்ற அந்தச் சிறுவன், தனது தந்தை தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த சாகசத்தை செய்திருக்கிறான்.
இதற்காக யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டதுடன், கார் பார்க்கிங் செல்வற்கான மின்தூக்கி (லிஃப்ட்) பொத்தான்களை இயக்குவதற்காக ஒரு சிறிய நாற்காலியையும் அந்தச் சிறுவன் சமயோஜிதமாக எடுத்துச் சென்றிருக்கிறான்.
ரிமோட் கன்ட்ரோல் முறையில் வெற்றிகரமாக கதவைத் திறந்த அவன், முதல் கியரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தக் காரை ஸ்டார்ட் செய்ததும், அது நகரத் தொடங்கியிருக்கிறது.
அங்கிருந்தவர்கள் அனைவரும் மெர்ஸிடிஸ் கார் ஒன்று நகருவதையும், அதன் சாரதி இருக்கையில் ஒரு குழந்தை இருப்பதையும் பார்த்து திகைத்துள்ளனர்.
இருந்தாலும் கார் பார்க்கிங்குக்கு சிறிது தூரத்திலிருந்த கம்பத்தில் மோதி அந்தக் கார் நின்றுவிட்டதால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து எதுவும் நிகழவில்லை. இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.