மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்து : குடும்பஸ்தரின் உயிரை பறித்த பொலிஸ் வாகனம்!!

491

கோர விபத்து..

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றுகாலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்களின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வரவழைக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.