காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தை.. காதலன் செய்த வெறிச் செயல்!!

677

புதுச்சேரியில்..

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை அம்மா நகரை சேர்ந்தவர் ராஜா (32). ரவுடியான இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 2 மகள்களும், ஒரு மகன் உள்ளனர். இந்த பிள்ளைகளுக்கு ராஜா வளர்ப்பு தந்தையாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜா தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வெளியே சென்றார். கோபாலன்கடை மெயின்ரோடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில்வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார். இந்த படுகொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ராஜாவின் வளர்ப்பு மகளும், அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு வளர்ப்பு தந்தை ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வளர்ப்பு மகளின் காதலனுக்கும், ராஜாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

மேலும் கொலை சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் ராஜாவின் வளர்ப்பு மகளின் காதலன் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு சென்று காதலை விட்டுவிடும்படியும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த விரோதத்தில் வளர்ப்பு மகளின் காதலன் பிரகாஷ்ராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜாவை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். தமிழக பகுதியான பெரம்பையில் பதுங்கியிருந்த காதலன் பிரகாஷ்ராஜ் அவரது நண்பர்களான மணிகண்டன், தங்கமணி, தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்பு அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் போலீஸ் அடைத்தனர்.