விரும்பியதை படிக்க முடியவில்லை.. நினைத்தபடி வாழ முடியவில்லை… 12ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

1112


சென்னையில்..



உங்களுக்கு பிடிச்சதை என்னால் படிக்க முடியலை. நான் விரும்புறதைப் படிக்க முடியலை. நெனைச்சப்படி வாழவும் முடியலை. என் தங்கச்சியாவது சந்தோஷமா வாழட்டும்’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது ஆவடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை ஆவடி அடுத்து உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் விஜயன் (47). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி.




இந்த தம்பதிக்கு பாலாஜி (17) என்ற மகனும், ஹரிணி (14) என்ற மகளும் உள்ளனர். இதில், பாலாஜி ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் ஹரிணி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.


விஜயனும், அவருடைய மனைவி ஜெயலட்சுமியும் பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி எடுக்க ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றிருந்தனர். வீட்டில் பாலாஜி மற்றும் அவரது தங்கை ஹரிணி இருவர் மட்டும் இருந்தனர்.

இந்நிலையில் பாலாஜி, படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அண்ணன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஹரிணி, கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார்.


அப்போது பாலாஜி, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாலாஜியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், தற்கொலை செய்த பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பாலாஜி ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் அவர், “நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பம் இல்லை. என் இஷ்டத்துக்கு நீங்கள் வாழ விடுவதில்லை.

30 வயதுக்கு மேல் திருமணமாகி வேலைக்கு போன பிறகு தான் நான் ஜாலியாக இருக்க முடியுமா? நான் உயிருடன் இருந்து என்ன பண்ணப் போகிறேன். என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்” என உருக்கமாக கடிதத்தில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ப்ளஸ்-2 படித்து வந்த பாலாஜி, ஜேஇஇ தேர்வுக்கும் பயிற்சி பெற்று வந்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட விரக்தியில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.