தாய்லாந்தில்..
பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்றுள்ள தாய்லாந்து மொடலின் உடை உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 71வது பிரபஞ்ச அழகிப் போட்டி வரும் 14ஆம் திகதி நியூ ஆர்லியன்ஸில் நடக்கிறது.
இதில் பல நாடுகளைச் சேர்ந்த மொடல்கள் கலந்துகொண்டுள்ளனர். தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையை போட்டியாளர்கள் பல சுற்றுகளில் அணிந்து வருவார்கள்.
அந்த வகையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது மொடலான அன்னா சுயங்கம், குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அதற்கும் மேலாக அவர் கூறிய காரணம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அன்னா தனது பெற்றோர் குறித்து கூறும்போது குப்பை சேகரிக்கும் தந்தைக்கும், துப்புரவாளரான தாய்க்கும் பிறந்தவள் நான் என்றார்.
மேலும், குப்பை அழகு ராணி என்று தான் அழைக்கப்பட்டாலும் அது நான் ஒரு விலைமதிப்பற்ற ரத்தினமாக பிரகாசிப்பதை ஒருபோதும் தடுக்கவில்லை என கூறினார். கடந்த ஆண்டு தாய்லாந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை அன்னா வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.