அம்மா போய்ட்டா.. குழந்தைகளை ஏமாற்றி வந்த தந்தை.. ஒன்றரை வருடம் கழித்து தெரியவந்த உண்மை!!

852

கேரளாவில்..

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவன். இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, திருமணமான நாள் முதல், சஞ்சீவன் மற்றும் ரம்யா ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அப்படி இருக்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரம்யாவை காணவில்லை என அவரது கணவர் சஞ்சீவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளும் தாய் இல்லாமல் கதறி துடித்த நிலையில், மறுபக்கம் ரம்யாவின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சஞ்சீவன் மீதும் சந்தேகம் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை அவர்கள் போலீசாரிடம் தெரிவித்த நிலையில் தகுந்த ஆதாரங்கள் உள்ளிட்டவை இல்லாமல் போனதால் சஞ்சீவனை பெரிய அளவில் அப்போது விசாரிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் தான் கடந்த அக்டோபர் மாதம், கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் சில பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் மாநிலம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது காணாமல் போன பெண்களின் பட்டியலை எடுத்து இதுகுறித்து தீவிர விசாரணையிலும் இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் தான் ரம்யா வழக்கையும் போலீசார் மீண்டும் விசாரிக்க தொடங்கிய நிலையில், இது தொடர்பாக கணவர் சஞ்சீவனிடம் நடந்த விசாரணையின் போது அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மனைவி ரம்யாவை கொலை செய்ததையும் சஞ்சீவன் ஒப்புக் கொண்டுள்ளார்.

விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, மனைவி ரம்யா மீது சஞ்சீவனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாகவும், பல்வேறு நிபந்தனை விதித்து அவரை தொந்தரவு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

அப்படி இருக்கையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரம்யா மீது சந்தேகப்பட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் சஞ்சீவன். இதில் ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியை தாக்க அதில் சம்பவ இடத்திலேயே ரம்யா உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்துதான், மனைவி ரம்யாவின் உடலை வீட்டு வாசலிலேயே புதைத்து விட்டு மனைவியை காணவில்லை என்றும் போலீசார்ரிடம் புகார் கொடுத்து சஞ்சீவன் நாடகமாடியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்கடுத்து ரம்யாவின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் தோண்டிய போலீசார், அவரது உடலின் எலும்புக்கூடுகளை மீட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.