கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

866

சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி..

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றைய தினம் இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் பொலிஸாரின் விசாரணையின் போது காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயத்தில் தான் காதலியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று காதலனால் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாகும். இவர்கள் தற்போது கிரிவத்துடுவ சந்தியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட சத்துரி ஹன்சிகா குடும்பத்தின் மூத்த மகள் எனவும் அவருக்கு இன்னொரு மகள் இருப்பதாகவும் அவர் இன்னும் பாடசாலை செல்லும் மாணவி எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சதுரி ஹன்சிகா உயர்தரத்தில் உயர் சித்தி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இந்த மாணவி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்துகிறார் எனவும் அது ஒரு கல்விச் சேனல் எனவும் அவரது பல்கலைக்கழக நண்பர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவரது கழுத்தை அறுத்து கொன்ற காதலனும் அவருடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் என தெரியவந்துள்ளது.

வெல்லம்பிட்டியவில் வசிக்கும் அவரது பெயர் பசிந்து சதுரங்க என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, கிரிபத்கொட போன்ற பகுதிகளில் தரம் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தியதன் மூலம் இந்த மாணவன் பிரபலமடைந்தவராகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன், “எனக்கு அவர் வேண்டும். அவர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. நான் அவரை உண்மையாகவும் முழு மனதுடன் நேசித்தேன். அவர் வேறொருவரிடம் செல்ல முயன்றார்” என பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

தனது காதலியான இந்த மாணவி வேறு இளைஞர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வார் என்று பயந்ததாகவும் அதன் காரணமாக அவருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்ற மாணவர்களுடனும் ஆண்களுடனும் பேசுவதற்கும் இந்த இளைஞன் அவருக்கு தடை விதித்திருந்தார். “நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதனால் எனக்கு வேறும் எதுவும் செய்வதற்கு எனக்கு வேறு வழி எதுவும் இல்லை” என அந்த மாணவன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் கழுத்தை அறுத்த கத்தியை கடையொன்றில் இருந்து கொள்வனவு செய்து, முன்கூட்டியே கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“கத்தியை பையில் வைத்துக்கொண்டு நேற்று மதியம் 12.30 மணியளவில் அவருடன் ரேஸ்கோர்ஸ் வந்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இனி என்னும் பேசவும் பழகவும் முடியாது எனவும் காதலி குறிப்பிட்டுள்ளார். இதனால் கோபமடைந்து கொலை செய்துவிட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குதிரைப் பந்தய மைதானத்தின் புள்ளியிடும் பட்டியலுக்கு அருகாமையில் படிக்கட்டில் அமர்ந்திருந்த வேளையில் மதியம் 1.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காதலியைக் கொன்றுவிட்டு, இந்த மாணவன் இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் இரத்தக் கறை படிந்த பையை கையில் ஏந்தியவாறு ரேஸ்கோர்ஸில் இருந்து கொழும்பு பல்கலைக்கழகம் நோக்கி ஓடியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பல பாதுகாப்பு கமராக்களில் சந்தேகத்திற்குரிய மாணவர் பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடுவது பதிவாகியுள்ளது. பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மாணவன் பின்னர் வெல்லம்பிட்டியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கையடக்கத் தொலைபேசி மற்றும் அடையாள அட்டையை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் களனி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் அவர் வீடு திரும்பியதும், பொலிஸ் குழுவொன்று பாதுகாப்பு கமரா காட்சிகளில் இருந்து இந்த மாணவனின் அடையாளத்தை அடையாளம் கண்டு, வெல்லம்பிட்டிய வீட்டிற்கு வந்தது.

பொலிஸ் குழு வெல்லம்பிட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தபோது சந்தேகத்திற்குரிய மாணவன் வீட்டிலேயே இருந்துள்ளார். அத்துடன் வீட்டில் மாணவியை கொல்ல பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த கத்தியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது, அதற்கமைய, சத்துரி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வந்த பின்னர், பசிது மதுசங்க என்ற இளைஞனுடன் நட்பை ஏற்படுத்தினார். இந்த நட்பு காதல் உறவாக வளர அதிக நேரம் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு காதலர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், மாணவன் மன அழுத்தத்தால் அவதிப்பட்டமை இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நண்பர்களுக்கும் இந்த விடயங்கள் இரகசியமாக இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இப்படி சச்சரவுகளுக்கு மத்தியில் பேணப்பட்டு வந்த காதல் கொலையில் முடிவதற்கு சத்துரியின் வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பதிவுகளே காரணம் என பல்கலைக்கழக தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

காதலனுக்கு பிடிக்காத நண்பர்களுடன் பழகுவதும், அவர்களுடன் பேசுவதும் அவரது பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காதலியிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியும், வேறு உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியும், அவருக்கு அதிக அழுத்தம் கொடுத்துள்ளார்.

காதலி வேறொரு இளைஞனுடன் தொடர்பு வைத்து தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்ற பயம் அவருக்கு தீவிரமடைந்து, அது கொலை வரை சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.