கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு ஓடிய இளம்பெண் : திட்டம் போட்டு கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

512

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசித்து வருபவர் 24 வயதான சுதாசந்தர். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராம், போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலையான வாலிபருடன் வந்த பெண்ணை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் அந்த பெண்ணின் பெயர் ராகவி என்பதும், 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அடுத்த ஆவடி மோரை பகுதியில் வசித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுதாசந்தருடன் காதல் வயப்பட்டு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதை அறிந்த ராகவியின் பெற்றோர்கள் உடனடியாக அவரது உறவுக்காரரான வசந்த் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்ற ராகவி முன்னாள் காதலன் சுதாசந்தருடன் வாழ முடிவு எடுத்தார். அதன்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் வெளியேறிய ராகவி, சுதாசந்தருடன் புழல் லட்சுமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தினார்.

தனது குழந்தையுடன் மனைவியை அபகரித்து வாழ்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த ராகவியின் கணவர் வசந்த் மற்றும் உறவினர்கள் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதனால் நேற்று முன்தினம் சுதாசந்தரை கொலை செய்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.