துருக்கியில்..
துருக்கியை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, புதைந்துபோன இளவயது மகளின் கைகளை கோர்த்தபடி தந்தை ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நொறுங்க வைத்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள நிலநடுக்கத்தில் இதுவரை 5,200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிறார்கள் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மட்டுமின்றி, ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவை ரிக்டர் அளவில் 7.8 என பதிவான நிலநடுக்கம் மொத்தமாக புரட்டிப்போட்டது.
இதனையடுத்து இன்று பகல் 5.8 என்ற ரிக்டர் அளவில் இன்னொரு நிலநடுக்கம் தாக்கியது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி கடும் குளிர், பனிப்பொழிவு என மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், இரண்டு நாடுகளிலும் மொத்தமாக இறப்பு எண்ணிக்கை 20,000 தொடலாம் எனவும் 1.4 மில்லியன் சிறார்கள் உட்பட மொத்தம் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி புதைந்துபோயுள்ள இளம் வயது மகளின் கைகளை கோர்த்தபடி, தந்தை ஒருவர் காத்திருக்கும் நொறுங்க வைக்கும் காட்சி பலரையும் கலங்கடித்துள்ளது.
15 வயதேயான சிறுமி மொத்தமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள, தந்தை Mesut Hancer தமது மகளின் வெளியேத் தெரியும் கைகளை மட்டும் கோர்த்தபடி காணப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை, கடும் போராட்டத்திற்கு பின்னர் Irmak என்ற அந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி விடிகாலை 4.17 மணியளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மக்கள் தூக்கத்தில் இருந்த நிலையில், அவர்களின் வீடுகள் அவர்கள் மீது விழுவதற்கு முன் தப்பிக்க முடியாமல் போயுள்ளது. சுமார் 200 மைல்கள் சுற்றளவில் டசின் கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் தரைமட்டமாயுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிக மிக முக்கியம் எனவும் கூறுகின்றனர். முதல் நிலநடுக்கம் பதிவான பின்னர் சுமார் 200 நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.