24 மணி நேர பணிப்புறக்கணிப்பு..
நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (08.02.2023) காலை 8.00 மணி தொடக்கம் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(08.02) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன்,
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட வைத்தியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன், வெளிநோயாளர் பிரிவு , கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை நோயாளிகள் பல்வேறு சிரமக்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.