காதலனுடன் 3 நாளில் திருமணம்… மணப்பெண் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

469

திருவாரூரில்..

திருவாரூர் அருகே திருமணம் நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் அருகே நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்- ஜெயந்தி தம்பதியினர். இவர்களின் மகள் சுஷ்மிதா வயது 21. இவர் பிஎட் படித்து படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேப்பலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 27) திருவாரூரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார். ரமேஷ்குமாரும் சுஷ்மிதாவும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சுஷ்மிதா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு வீட்டு தரப்பினரும் கலந்து பேசியதையடுத்து சுஷ்மிதா ரமேஷ்குமார் வீட்டில் சேர்ந்து வசித்து வந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி இரண்டு வீட்டு தரப்பினரும் இணைந்து திருமணம் நடத்த உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று சுஷ்மிதாவை வீட்டில் விட்டு விட்டு திருவாரூருக்கு புதிய துணிகள் வாங்குவதற்காக பெற்றோர் சென்றுள்ளனர். இதனையடுத்து, சுஷ்மிதா வீட்டின் பின்பக்கம் இருந்த கூரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் பார்த்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஷ்மிதாவின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணை காரணமாக அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.