கிருஷ்ணகிரியில்..
குடும்பத் தகராறில் இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37).
இவர் மனைவி அம்மு (33). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, சுஜி (16), ரேண்டி ஆர்டன் (12), மாரன் (10), சுவிக்ஷா (7), பீஸ்மர் (4) என ஐந்து குழந்தைகள்.
அம்மு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கூலி வேலை எனக் கிடைக்கின்ற கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்திவந்திருக்கிறார்.
அடிக்கடி சமையல் வேலைகளுக்குச் சென்று வந்த சுரேஷுக்கு அதீத குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவிக்குள், அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், நேற்று இரவு இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், அம்மு கடும் மனவிரக்தியில் இருந்திருக்கிறார்.
இன்று காலை சுஜி, ரேண்டி ஆர்டின், மாரன் ஆகியோர் பள்ளிக்குச் சென்றிருந்தனர். வீட்டிலிருந்த அம்மு, மகள் சுவிக்ஷா, மகன் பீஸ்மரை அழைத்துக்கொண்டு, ஊத்தங்கரை அருகிலுள்ள கல்லாவி பகுதியில், ரயில் தண்டவாளம் அருகே சென்றிருக்கிறார்.
காலை 10:30 மணிக்கு அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை – கோவை இன்டர்சிட்டி ரயில் முன் இரு குழந்தைகளுடன் பாய்ந்து அம்மு தற்கொலை செய்துகொண்டார்.
அதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். துயரமான இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து கல்லாவி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ பத்மாவதியிடம் பேசினோம். ‘‘கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததால்தான், அம்மு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
வேறு எந்தக் காரணமும் இல்லை. சுரேஷின் குடிப்பழக்கம், மனவிரக்தியால், அம்மு இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்’’ என்றார்.