மன்மோகன் பதவி விலகியதும் அரை மணி நேரம் பிரதமராக இருந்த 19 வயது இளைஞர்!!

1060

BBC

மன்மோகன்சிங்குக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக அரை மணி நேரத்துக்கு ஒரு 19 வயது வாலிபர் பதவி வகித்தார் என்றால் யாரும் நம்ப முடியாது.

ஏனெனில் அப்படி ஒன்று நடக்க தேவையுமில்லை, அதுபோன்ற எந்த செய்தியும் வரவுமில்லையே என்று நினைக்க கூடும். ஆனால் பிபிசி செய்தி நிறுவனம் அப்படித்தான் இந்த சம்பவத்தை வர்ணிக்கிறது.

அந்த அதிருஷ்டசாலி வாலிபர் பெயர் கைசர் அலி. உத்தரபிரதேச மாநிலம் லக்னொவை சேர்ந்த இவர்தான் அரை மணி நேர ‘பிரதமர்’. பிரதமர் பதவியிலிருந்தபோது மன்மோகன்சிங் @PMOIndia என்ற பெயரில் டுவிட்டர் கணக்கை வைத்திருந்தார். பிரதமர் அலுவலக செய்திகள் அதன் வாயிலாக வெளியிடப்பட்டன. ஆனால் புதிய அரசு பொறுப்பேற்க தயாரானதும், பழைய கணக்கிலிருந்த பாலோவர்களை எல்லாம் வேறு கணக்கிற்கு மாற்றிவிட்டனர்.

டுவிட்டர் செய்த மாயம் பெயர் மாற்றத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே பழையபடி @PMOIndia கணக்கு , புதிய அரசின் பிரதமருக்கு வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் @PMOIndia முடக்கப்பட்டது. அப்போதுதான் ஒரு விபரீதம் நடந்தது. கைசர் அலி @PMOIndia என்ற பெயரில் எதேச்சையாக கணக்கை தொடங்கியுள்ளார். டுவிட்டரும், அதுபோல யாரும் தற்போது கணக்கை வைத்திருக்கவில்லை என்று கூறி கைசர் அலிக்கு அனுமதி கொடுத்துவிட்டது.

அறியாப்பிள்ளை தெரியாமல் செய்தார் இதன்பிறகு அரை மணி நேரத்தில் கைசர் அலியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அப்போதுதான், நாட்டின் பிரமதருக்கான டுவிட்டர் கணக்கை தான் பயன்படுத்தியது கைசர் அலிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியபோது, டுவிட்டரில் நான் 2011ம் ஆண்டில் சேர்ந்தேன். @Iamqaiserali என்ற பெயரில் கணக்கை ஆரம்பித்து நான் டுவிட் செய்து வருகிறேன்.

நானே தேர்ந்தெடுத்தேன் தேர்தல் காய்ச்சல் நாடெங்கும் பரவியுள்ளதால், தேர்தல் சார்ந்த ஒரு யூசர் நேம் வைத்துக்கொள்ள எனக்கும் ஆசை வந்தது. மே 20ம்தேதி, பெயர் மாற்றவேலையை செய்தேன். பிரதமர் பதவி குறித்து மக்களிடையே பரபரப்பாக பேச்சு எழுந்ததால் அதையே யூசர் நேமாக வைக்கலாம் என PMOIndia என்று பெயர் கொடுத்து பார்த்தேன். ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த பெயரை பயன்படுத்த டுவிட்டர் அனுமதித்தது.

அந்த கணக்கை ஆரம்பித்ததும், நாடு முழுவதிலுமிருந்து பல மக்கள், பிரதமர் என்று நினைத்து எனக்கு டுவிட் செய்தனர். என்னிடம் தேர்தல் தொடர்பாக கேள்விகளும் கேட்டனர். அப்போதுதான் எனக்கு லேசாக நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது. தெரியாத்தனமாக, பெரிய தவறை செய்துவிட்டதை உணர்ந்த நான், உடனடியாக மன்னிப்பு கேட்டு அதிலேயே டுவிட்டும் செய்தேன். அரை மணி நேரம்தான் இருக்கும், அதற்குள் அந்த கணக்கு முடக்கப்பட்டது.

இதுபற்றி தெரிந்ததும் எனது பெற்றோர் என்னை திட்டினார்கள். ஆனால் நண்பர்கள் என்னை பிரதமராகிய யோகக்காரன் என்று பாராட்டினார்கள். எனக்கோ செய்த தப்புக்காக, சிறையில் போட்டுவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. நான் தெரிந்து அந்த தவறை செய்யவில்லை.

டுவிட்டர் அந்த பெயரை எடுத்துக்கொள்ளுமாறு கூறியதால் நம்பி கணக்கை ஆரம்பித்தேன். இதற்காக நாட்டு மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த செய்தியைத்தான் பிபிசி இந்தியாவின் அரை மணி நேர பிரதமர் என வர்ணித்துள்ளது.