எட்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறும் தாய்.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

533

நெல்லையில்..

பள்ளி மாணவ, மாணவிகள் பாதை மாறுவதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது. ஆன்லைன் படிப்பிற்காக அவர்களது கைகளில் பெற்றோர்களே செல்போனை கொடுக்க நிர்பந்தம் ஏற்பட்டு தற்போது அந்த செல்போனைகள் இல்லாமல் அவர்களுக்கு பொழுதே போகாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பத்தாத குறைக்கு கேம்ஸ்களும், இன்ஸ்டாகளும் அவர்களை அடிமையாக்கி வருகின்றன. இந்த தாக்கத்தால் ஏற்படும் மன உளைச்சலில் சிறார்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது நிகழ்வது பெரும் துயரமாக உள்ளது.

நெல்லை டவுன் தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் (வயது 13) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல்ராஜ் உயிரிழந்த நிலையில் தாய் மேரி தனியார் நிறுவனத்தில் பணி செய்து தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே தாய் மேரி மகனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தருண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்து தருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.