பணத்திற்காக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட ஒன்றரை வயது குழந்தை.. விசாரணையில் வெளியான தகவல்!!

1044

இலங்கையில்..

பணத்திற்காக ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பக்கமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வெயாங்கொடையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

அங்கிருந்து பக்கமுன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது சிறுமியை தடி மற்றும் கைகளால் கொடூரமாக தாக்கி, அதனை காணொளியாக பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி பணம் கேட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் ஹிங்குராகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.