பெண் மருத்துவர் கொலை.. காதலன் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

411

ஜம்முவில்..

ஜம்முவை சார்ந்தவர் ஜோஹர் மெஹ்மூத் கனாய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இளைஞரும், சுமேதா ஷர்மா என்ற இளம்பெண்ணும் ஜம்முவில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் BDS படித்தனர். அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுமேதா, மேற்படிப்புக்காக ஜம்முவை விட்டு வேறு பகுதிக்கு செல்லவே, ஜோஹர் ஜம்முவில் இருந்துள்ளார். தற்போது MDS படித்து வரும் சுமேதா, கடந்த மார்ச் 7-ம் தேதி ஹோலி பண்டிகையை கொண்டாட ஜம்முவுக்கு வந்துள்ளார்.

எனவே சம்பவத்தன்று தனது ஆண் நண்பரான ஜோஹரை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். இருவரும் ஜோஹர் இல்லத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஜோஹர், தன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சுமேதாவை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார். தொடர்ந்து கதறி அழுத ஜோஹர், தானும் தற்கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி தனது முகநூல் பக்கத்தில் தனக்கு அதிகமான சொந்த பிரச்னை இருப்பதால், தனது வாழ்க்கையை முடித்து கொள்ளப்போவதாக பதிவிட்டு தனது வயிற்றில் அதே கத்தியால் குத்தி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். ஜோஹரின் முகநூல் பதிவை கண்ட அவரது உறவினர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் ஜோஹர் வீட்டிற்கு விரைந்த போலீஸ், அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை என்பதால், அதனை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கே பார்க்கையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தனர். தொடர்ந்து இருவரையும் மீட்ட அதிகாரிகள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சுமேதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஜோஹர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் ஜோஹர் கண்விழித்த பிறகே அவர்களுக்குள் என்ன வாக்குவாதம் நடந்தது, எதனால் கொலை செய்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகும். பெண் மருத்துவரை அவரது நண்பரான ஆண் மருத்துவர் கத்தியால் கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஜம்முவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.