தமிழகத்தில்..

தமிழகத்தில் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவி வரும் கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் 5 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, விழுப்புரம், மதுரை, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக தென்னை மரம் வேரோடு சாய்ந்தது.இதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள அண்டம்பள்ளம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன்.

இவரது மகள் 16 வயது வினோஷா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

அப்போது திடீரென விவசாய நிலத்தில் இருந்த வினோஷா மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெறையூர் போலீசார், வினோஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





