தங்காலையில்..
தங்காலை, வெலியார, நெத்தோல்பிட்டிய பிரதேசத்தில் கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் மரணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தங்காலை – நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தங்காலை பிரதேச சபையின் வேட்பாளரான ‘டேனி பேபி’ என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பணிபுரியும் சந்தேகநபரின் தோழி ஒருவருக்கு அரசாங்கத்திடம் இருந்து இலவச உரம் பெற்றுத்தருமாறு கடிதம் வழங்காத காரணத்தினால் குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையின் போது இறந்த பெண்ணின் சித்தி டி.ஜி.தயாவதியும் உடன் இருந்ததாகவும், கொலை தொடர்பில் பொலிஸாரிடம் நேரில் கண்டவற்றினை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்……,
நானும் எனது மகளும் பேருந்துக்காக சென்றபோது, ’டேனி பேபி’ என்பவர் பாதையில் அமர்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்துவிட்டு எங்கள் முன்னால் வந்து உடனடியாக இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தில் குத்தினார்.
நான் அதை தடுக்க முயன்றபோது, என்னையும் குத்த முயற்சித்தார். மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.’டேனி பேபி’ மகளின் கழுத்தையும், தலையையும் முன்னும் பின்னுமாக தள்ளி, வெட்டினார்.
தரையில் விழுந்த மகள் கழுத்தை அறுத்தவுடன் வலியால் துடித்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரையும் அனுமதிக்காமல், கத்தியை கையில் ஏந்தியபடி டேனி பேபி, அருகில் வந்தவர்களை மிரட்டினார்.
இதனை தொடர்ந்து, தங்காலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் அந்த இடத்திற்கு வருகை தந்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரியின் உதவியுடன் பல பிரயத்தனத்தின் பின்னர் டேனி பேபி என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடற்றொழிலாளரான டேனி பேபி, உரத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளும் கடிதம் கேட்டு விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தரான தீபஷிகா லக்ருவானி விஜேதாசவை பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் (26) இரவு இரண்டு சந்தர்ப்பங்களில் பெண் வசிக்கும் நெதொல்பிட்டிய வெலி ஆரை வீட்டுக்குச் சென்று உரம் பெறுவதற்காக கடிதத்தை கோரியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.