லிஸ்பனில்..
லிஸ்பனில் உள்ள இஸ்லாமிய மத மையத்தில் அத்துமீறி நுழைந்த அகதி ஒருவரால் கொடூரமாக கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் புகைப்படம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
போர்த்துகல் குடிமக்களான 24 வயது Mariana Jadaugy மற்றும் 49 வயது Farana Sadrudin ஆகிய இருவருமே ஆப்கான் அகதி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.
உள்ளூரில் அப்துல் பஷீர் என அறியப்படும் அந்த ஆப்கான் அகதி, நீளமான கத்தி ஒன்றுடன் அந்த இஸ்லாமிய அமையத்தில் நுழைந்து இரு பெண்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளான்.
மட்டுமின்றி, தமது ஆங்கில மொழி ஆசிரியரையும் அப்துல் பஷீர் கொடூரமாக தாக்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் மனைவியை இழந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் பஷீர், பொலிசாரால் காலில் சுடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
கத்தியை கைவிட பொலிசார் அறிவுறுத்தியும், கண்டுகொள்ளாத நிலையிலேயே பொலிசார் அப்துல் பஷீரின் காலில் சுட்டுள்ளனர். தற்போது அவர் பொலிசாரின் பாதுகாப்பில், சிகிச்சையில் உள்ளார் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, மரியானா மற்றும் ஃபரானா ஆகியோரின் மறைவுக்கு, அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இருவருமே தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய மையத்தில் பணியாற்றுபவர்கள் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர்த்துக்களில் உள்ள ஆப்கான் சமூகத்தினர் தெரிவிக்கையில், அப்துல் பஷீர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் எனவும், தமது பிள்ளைகள் மூவரின் பசியை போக்க அவர் கடுமையாக போராடி வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.