கோர விபத்தில் பலியான பாடசாலை மாணவர்கள்.. பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்!!

763

பதுளையில்..

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பதுளை தர்மதூத வித்தியாலயத்தில் 13ஆம் தரத்தில் கல்வி கற்ற ஆர். எம். ரவிந்து மற்றும் ஹரேந்திர ருக்மால் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மாணவரான பதுளையைச் சேர்ந்த ரவிது துலக்ஷனா என்பவரின் மரணத்திற்கு மூளை, மார்பு மற்றும் மார்புப் பகுதியின் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயமே காரணம் எனவும் பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.

மேலும் மற்றுமொரு மாணவனான ஹலியால புதிய வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஹரேந்திர ருகமலின் தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்குக் காரணம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் போது பிரதான வீதியில் வாகன பேரணிக்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில்,குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக பதுளையில் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் வாகன பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது விபத்திற்குள்ளான வாகனத்தை பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்தியதாகவும், விளையாட்டு பயிற்சிவிப்பாளர் வாகனத்தை செலுத்த வேண்டாமென மாணவரை பல முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையும் மீறி மாணவர்கள் குழு வாகனத்தை செலுத்திய போது மைதானத்தில் காணப்பட்ட இரும்பு தூண் ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த வாகன பேரணியை பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்யப்படவில்லை என பதுளை தர்மதூத உயர்தர பாடசாலை அதிபர் எச்.எம்.எம். செனரத் பண்டார தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.