சொத்து தகராறு : இரும்பு கம்பியால் மருமகளை கொலை செய்த மாமானார்!!

505

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி(28).



தங்கராஜின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அவர் 2வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு செய்து வந்தார். ஆனால் இதற்கு தமிழரசன் மறுத்து வந்ததாக தெரிகிறது.

மேலும் தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜை 2வது திருமணம் செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

இதையடுத்து, தமிழரசன் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து முத்துமாரி தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து காவல் நிலையம் மட்டும் 108க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் முத்துமாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் அங்கு திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மாமனாரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் உறவினர்கள் வீட்டிலிருந்த முத்துமாரி உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து தங்கராஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.