சாக்லேட் வாங்கி தராத கணவர்.. மனமுடைந்து விபரீத முடிவு எடுத்த காதல் மனைவி!!

699

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் சோனப்பா லே-அவுட் பகுதி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு சாக்லேட் வாங்கி தராததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



கர்நாடக மாநிலம் பெங்களூரு எண்ணூர் அருகே சோனப்பா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (30). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கு 5 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

லே-அவுட் பகுதியில் சலூன் கடை வைத்து கெளதம் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே தம்பதிகளுக்குள் அடிக்கடி சின்னச்சின்ன சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது.

சண்டை வந்த பிறகு சமாதானம் செய்ய மனைவிக்கு, கெளதம் ஏதாவது பொருள் அல்லது சாக்லேட் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் கணவர் கெளதமிடம் சண்டை நடந்து முடிந்தபிறகு, சாப்பிட சாக்லேட் வேண்டும் என மனைவி நந்தினி கேட்டுள்ளார். வேலை செல்லும் அவசரத்தில் கணவர் கெளதம் அதனைக் கண்டுக்காமல் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இதனையடுத்து கடைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே கெளதம் செல்போனுக்கு, நந்தினி ஒரு மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், I am going to deep sleep – குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கெளதம், 20 முறைக்கு மேல் போன் செய்து, நந்தினி போனை எடுக்காமல் இருந்துள்ளார். பின்னர் பதற்றத்தில் வீட்டிற்கு வேகமாக சென்ற கெளதம் வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்படுள்ளது கண்டுள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு கெளதம் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கியவாறு நந்தினி கிடந்துள்ளார்.

இதனால் பதறிப்போன கெளதம் உடனே நந்தினியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நந்தினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட கெளதம் அங்கேயே கதறி அழுத சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு சாக்லேட் வாங்கி தராததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.