சேலத்தில்..
சந்தோஷமாக தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டவர்களுக்கு பர்த்டே பார்ட்டி துக்க தினமாக மாறி உயிரையும் பறிக்கும் என்பது தெரியாமலேயே அன்றைய பொழுது விடிந்தது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆனைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சரவணன் (21).
எடப்பாடி கோணமோரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சரவணன், பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சரவணனுக்கு பிறந்த நாள் என்பதால், தன்னுடைய கல்லூரி நண்பர்கள் 7 பேரையும், மேட்டூர் அரசு கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் சேர்த்துக் கொண்டு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்தார்.
இதையடுத்து 10 மாணவர்களும் ஒன்றாக நேற்று காலை 11 மணியளவில் கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து கொண்டு, நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தேவூர் கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காகச் சென்றனர்.
அங்கு ஆற்றில் சுமார் 2 மணி நேரம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குளித்து, ஆற்று தண்ணீரில் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னர் அனைவரும் பிற்பகல் 1 மணியளவில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் மீண்டும் அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினர்.
அந்த மாணவர்கள் ஆற்றில் மேடான இடத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் அனைத்து இடமும் ஒரே மேடாக தான் இருக்கும் எனக் கருதி 5 மாணவர்கள் தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்திற்கு ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு தண்ணீருக்குள்ளேயே நடந்து சென்றனர்.
அப்போது கல்வடங்கம் காவிரி ஆற்றின் மறுகரையான ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூர் பகுதி காவிரி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் அந்த மாணவர்களைப் பார்த்து இங்கே வர வேண்டாம் ஆழமான பகுதி என்று சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தத்தை கேட்ட உடன் தப்பிக்க முயற்சிக்கும் போது அந்த 5 மாணவர்களும் கைகளை பிடித்தவாறு ஆற்றில் திடீரென மூழ்க தொடங்கினார்கள்.
இதைப் பார்த்த அவர்களுடன் வந்தவர்களில் கரையில் நின்ற மாணவர்கள், கூச்சல் போட்டு ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அலறினார்கள். அப்போது தண்ணீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவர் மட்டும் கைகளை விடுவித்துக் கொண்டு கரைக்கு தப்பி ஓடி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆற்றில் மூழ்கிய மாணவர்களில் ஒருவரான சேலம் மாவட்டம், இளம்பிள்ளை இ.காட்டூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (20) என்ற மாணவரின் உடல் மதியம் 2.30 மணியளவில் மீட்கப்பட்டது. தொடர்ந்து 3 மணியளவில் கொங்கணாபுரம் எருமைப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் முத்துச்சாமி (20) என்ற மாணவரின் உடலும் மீட்கப்பட்டது.
பின்னர் மாலை 5 மணிவரை தீயணைப்பு படையினரும், மீனவர்களும், போலீசாரும் தீவிரமாக தேடி ஆற்றில் மூழ்கிய மாணவர்களான எட்டிகுட்டை மேடு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் பாண்டியராஜன் (20), கன்னந்தேரி கோசேரிப்பட்டியை சேர்ந்த மாது மகன் மணிகண்டன் (20) ஆகியோரின் உடல்களை அடுத்தடுத்து மீட்டனர்.
இறந்த மாணவர்களின் உடல்களைப் பார்த்து ஆற்றின் கரையில் கூடியிருந்த மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
இறந்த மாணவர்களுடன் குளிக்க சென்ற மாணவர்களும் அந்த நிமிடம் வரையில் தங்களுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த நண்பனின் உயிரற்ற உடலைக் கண்டு கதறி அழுதனர். இதனால் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையே சோக மயமாக காட்சி அளித்தது.
பின்னர் ஆற்றில் மூழ்கி பலியான மாணவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.