கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 பெண்கள் கைது!!

317

A11

சுற்றுலா விசாவின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 20 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவிக்கின்றார்.

சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லவிருந்த பெண்களே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது.

தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றவர்களிடம், தொழில் நிறுவனத்தின் ஒப்பந்தம் அல்லது தொழிலுக்கான விசா இருக்க வேண்டும் என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

அத்துடன் நாட்டின் சட்டத்திற்கு அமைய தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், அதனை கருத்திற்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவதானமாக செயற்பட்டு வருவதாகவும் பிரதி பொது முகாமையாளர் தெரிவிக்கின்றார்.

மேலதிக விசாரணைகளின் பொருட்டு கைதானவர்கள் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மங்கல ரந்தெனிய கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச் சென்று, அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அவர்கள் விற்பனை செய்யப்படும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.