ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள் : பெற்றோரின் கண்ணீர் கோரிக்கை!!

646

பிரித்தானியாவில்..

பிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் அந்த ரசாயங்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துமாறு கனேடிய பொலிசாரிடம் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனத்தின் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டார். 2019க்கும் 2020க்கும் இடையில் ஒன்ராறியோவில் இதேபோல, அதே ரசாயனத்தைப் பயன்படுத்தி குறைந்தது 23 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பிவருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்துள்ளார் Kenneth Law. அந்த ரசாயனம் மட்டும் தன் பிள்ளை கையில் கிடக்காமலிருந்திருந்தால், தன் மகன் இப்போது உயிரோடு இருந்திருப்பான் என்கிறார் Tomஇன் தந்தையான David Parfett.

ஆக, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், கனடாவும் பிரித்தானியாவும் இப்படிப்பட்ட விஷப் பொருட்கள் பிள்ளைகள் கையில் கிடைக்காமல் தடுக்கும் வகையில் சட்டங்களில் மாற்றங்கள் செய்யுமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.