வவுனியாவில் ஆசிரியர் மீது போலிக் குற்றச்சாட்டு : பாடசாலை சமூகம் போராட்டம்! !

3814


தரணிக்குளம் கணேசுவரா வித்தியாலத்தின் தமிழ்பாட ஆசிரியர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலியான தகவலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



இன்று (04.05.2023) காலை பாடசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள், எமது பாடசாலையின் தமிழ்பாட ஆசிரியரான திருமகன் மீது அண்மை காலமாக தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலே பதியப்பட்டு வருகின்றது. அதற்கு எமது எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கின்றோம்.





அத்துடன் சமூகத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை தட்டி கேட்டதற்காக இழிவான முறையில் அவர் பழிவாங்கப்பட்டு கொண்டிருக்கின்றார். அந்த விடயத்தை பாடசாலை சமூகம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு குறித்த நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுத்து ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க வேண்டிய கட்டாய நிலமையில் நாம் இருக்கின்றோம்.


ஒருதகவலின் உண்மைத்தன்மை தொடர்பாக ஆராயாமல் அதனை பலரும் பகிர்வு செய்தமையானது மோசமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே இனியாவது உண்மைதன்மையினை உணர்ந்துசெயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.


எமது திருமகன் ஆசிரியருக்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடு, நீதியை நிலைநாட்டு, அவதூறு வார்த்தை பேசாதே, ஆசிரியர்களை பாதுகார், உண்மை மட்டும் பதிவிடு, ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காதே போன்ற வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.