வவுனியாவில் தந்தையினை அவமானப்படுத்திய அதிபர் : தற்கொலைக்கு முயன்ற மாணவன்!!

3264


வவுனியா பூவரசங்குளம் பகுதியில் தந்தையினை பாடசாலை அதிபர் அவமானப்படுத்தியதாக தெரிவித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,



வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.



அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன் தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.



இதனையடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். இதன் பின்னர் மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் பொலிஸில் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.


இம் முறைப்பாட்டினை அடுத்து இரு பகுதியினரையும் பொலிஸார் அழைத்து பேசி விசாரணை நடத்தியதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே தன்னால் தந்தை அவமானப்படுவதை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.


இதனையடுத்து வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் பாடசாலையில் மாணவனின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பான வலயக்கல்விப் பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே சமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த அதிபர் முன்னர் கடமையாற்றிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கு கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்க மறுத்தமையினால் அம் மாணவி தற்கொலை செய்து உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.