ஒரே நாளில் 5 மாணவ மாணவிகள் எடுத்த விபரீத முடிவு!!

1035

விழுப்புரத்தில்…தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தற்கொலைச் செய்து கொண்ட மாணவன், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், தேர்ச்சியடைந்த பின்பும் தற்கொலைக்கு முயன்ற மாணவி என்று நேற்று தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் ப்ளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 5 மாணவ, மாணவிகள் தற்கொலைச் செய்து கொண்டு தங்கள் உயிரை போக்கிக் கொண்டனர்.

தோல்வி பயத்தால் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை ஆவடியில் பாரதி நகரில் வசித்து வரும் கனகராஜ் மகன் 17 வயது தேவா.

இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவில் வசித்து வரும் தனியார் பள்ளி மாணவி 17 வயது தாருண்யா ப்ளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் 19 வயது ரமணி. ஏற்கனவே கடந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித் தேர்வராக ஆங்கில தேர்வை எழுதினார்.

இதில் மீண்டும் தோல்வி அடைந்ததில் மனமுடைந்த மாணவி ரமணி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் 18 வயது அருந்ததி, 600க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில், 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.

இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை நாராயண குப்பம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது ஹரி, 11ம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்கும் தேர்வு எழுதி இருந்தார்.

இந்நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட ஹரி 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் 17 வயது சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் . இவர் 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.