வவுனியாவில் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்பு!!

5992

வவுனியா செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் காணாமல் போன நிலையில் நேற்றையதினம் அனுராதபுரத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த இரு மாணவர்களும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வருவது வழமை கடந்த திங்கட்கிழமை பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வேண்டுவதற்காக சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் விடுதி திரும்பவில்லை

அதன் பிறகு இரவு எட்டு மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர் காணாமல் போன மாணவனின் (மன்னார் முத்தரிப்புத்துறை) பெற்றோருக்கு தொடர்பு எடுத்து மகன் வீட்டுக்கு வந்தாரா என்று கேட்டுள்ளனர். குறித்த பெற்றோர்கள் ஏதேனும் பிரச்சினையா என்று கேட்ட போது விடுதி காப்பாளர்களால் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக விடுதி பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் சமூக வலைத்தளங்களிலும் இவ் இரு மாணவர்களினது புகைப்படங்களும் பகிரப்பட்டன.

இந்நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் நேற்றையதினம் இவ் இரு பாடசாலை மாணவர்களும் அனுராதபுரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். எனினும் இவர்களை யாரேனும் கடத்திச்சென்றார்களா அல்லது அவர்களவே சென்றனரா போன்ற விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.