வவுனியாவில் புகையிரத பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் : புகையிரத வேலை இடைநிறுத்தம்!!

1183

வவுனியாவில் புகையிரத பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் புகையிரத பாதை அமைக்கும் செயற்பாடு இன்று (15.05.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கல் வீதியிலிருந்து இருந்து ஏ9 வீதிக்கு செல்வதற்காக ஆலடி பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை கடந்த பல வருடங்களாக சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வடக்கிற்கான புகையிரத பாதையினை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த புகையிரத கடவை ஊடாக செல்வதற்கு தடையேற்படுத்தும் முகமாக புகையிரத பாதையினை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இப் போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.